தூரநோக்கு
வலிகாமம் மேற்கு பிரதேச மக்களுக்கு வினைத்திறன் மற்றும் விளைதிறன்வலிகாமம் மேற்கு பிரதேச மக்களுக்கு வினைத்திறன் மற்றும் விளைதிறன்மிக்க பொதுச்சேவைகளை நிலைபேறாக வழங்கும் முன்னோடியான நிர்வாகஅமைப்பாக உருவாக்குதல்
பணிநோக்கு
அரச கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களை திறம்படஅரச கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களை திறம்படஅமுல்படுத்தி மக்களின் சமூக பொருளாதார நலனை மேம்படுத்தும்வகையில் தரமான துரிதமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய வகையில்சேவைகளை வழங்குதல்.
சங்கானைப் பிரதேச செயலகத்தின் வரலாறு
யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமம் மேற்குப்பிரதேசம் அரசியல் , பொருளாதார ,சமூக , கலாசார , பண்பாட்டுப் பாரம்பரியங்களில் முதன்மை பெற்று விளங்கியிருப்பதைக் கிடைக்கக் கூடிய சான்றாதாரங்களைக்கொண்டும் இப்பிரதேச மக்களின் வாழ்வியல் நடைமுறைகளைக் கொண்டும் அறியக்கூடியதாக உள்ளது. சோழஅரசர்கள், யாழ்ப்பாணத்து அரசர்கள், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்,ஆங்கிலேயர் எனப் பல அரச ஆட்சித் தாக்கங்களின் எச்சங்கள் இப்பிரதேசத்தில் உள்ளன. சங்கானை,பண்டத்தரிப்பு போன்ற இடங்கள் அக்காலத்தில் சிறந்த வர்த்தக மையங்களாக இருந்துள்ளன. போக்குவரத்திற்குச் சாதாரணமாட்டுவண்டில்கள் , வில்லு வண்டில்கள் , திருக்கல் வண்டில்கள் ஆகியன பயன்படுத்தப்பட்டன. வட்டுக்கோட்டைப்பிரதேசம் இவற்றின் உற்பத்தியில் புகழ்பெற்றிருந்தது. இன்றும் இங்கு இந்த உற்பத்தி உண்டு. யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு ஆறான வழுக்கையாறு இப்பிரதேச அராலிக் கடலில் சங்கமமாகின்றமை ஒரு சிறப்பம்சமாகும்.
இப்பிரதேச சமயப் பண்பாட்டின் அழியாச் சின்னங்களாக – வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுழிபுரம் பறாளாய் விநாயகர் ஆலயம் , பொன்னாலை வரதராஜப்பெருமாள் கோவில் ஆகியன சிறப்புப்பெறுகின்றன. இந்துக்கள் பிதிர்க்கடன் நிறைவேற்றும் புனித இடமாகத் திருவடிநிலை உள்ளது. சங்கரத்தை – துணைவியில் கண்டுபிடிக்கப்பட்ட “பிரகேஸ்வரன்” ஆலயம் கி.பி. 15ஆம் , 16ஆம் நூற்றாண்டுகளுக்குரியதென்று பிற்கால ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கிரந்த மொழிக் கல்வெட்டுக்கள் இங்குள்ளமை குறிப்பிடத்தக்கது.
சங்கானையிலுள்ள ஒல்லாந்தர் காலத் தேவாலயம் போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்டதாவும் இது பின்பு ஒல்லாந்தரால் முருகைக் கற்கள் கொண்டு மேம்படுத்தப்பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.1678 இல் ஒல்லாந்தத் தளபதியான Laurens Pyl Ann என்பவரால் அமைக்கப்பட்ட வட்டுக்கோட்டைத் தேவாலயமும் பிரசித்தி பெற்றதாகும்.
சிறந்த புலமைப் பாரம்பரியமும் இப்பிரதேச வரலாற்றில் முக்கியம் பெறுகின்றது. ஆசியக் கண்டத்தில் முதன் முதலில் அமைக்கப்பட்ட வட்டுக்கோட்டை செமினரி (கலைக்கழகம்) பின்பு யாழ்ப்பாணக் கல்லூரியாக வளம் பெற்றுள்ளது. இக்கல்லூரியிலுள்ள நூலகம் போன்று ஆசியக் கண்டத்திலுள்ள நாடுகளின் பாடசாலைகளில் நூலகம் இல்லை என்பதும் இங்கு விதந்து சுட்டததக்கது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரிகளான கரோல் விசுவநாதப்பிள்ளை ,சி.வை.தாமோதரம்பிள்ளை ஆகிய இருவரும் யாழ்ப்பாணத்துத் தமிழர்கள். இவர்கள் யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி பயின்று சித்திபெற்ற புலமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எமக்குக் கிடைக்கின்ற ஈழத்துப் பழந்தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான “வட்டுக்கோட்டை பிட்டியம்பதி பத்திரகாளி அம்மன் ஊஞ்சல்” என்ற நூல் ஒல்லாந்தர் காலத்திற்கு முற்பட்டதாகக் கருதப்படுகின்றது. அதாவது , இந்நூல் ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திற்குரியதாகக் கருதப்படுகின்றது. வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கணபதி ஐயர் இதனை எழுதியுள்ளார்.
இப்பிரதேச மக்களின் ஜீவகாருண்யப் பண்பாட்டைப் பறைசாற்றும் வகையில், சங்கரத்தைக் கிராம அலுவலர் ( யா / 159 ) பிரிவில் வட்டுக்கோட்டை – நவாலி வீதியில் ஒரே இடத்தில் சுமைதாங்கி, மடம், கேணி, ஆவுரஞ்சுக்கல் மற்றும் ஆலயம் ஆகியவை அமைந்திருப்பது இன்றும் இப்பிரதேசத்திற்குச் சிறப்பளிக்கின்றது எனலாம்.
இலங்கை வரலாற்றில் அநுராதபுரம் இராசதானியாக விளங்கிய காலத்திலிருந்தே பிரதேச நிர்வாக முறைமை இருந்து வந்ததை ஆதாரங்கள் மூலம் அறிய முடிகின்றது. அக்காலத்தில் அரசர்கள் கிராமத் தலைவர்களினூடாகத் தமது அதிகாரங்களைப் பயன்படுத்தியதுடன் அவர்களூடாகத் தமக்குத் தேவையான வரிகளையும் வசூலித்தனர். இந்நிலையில் 1505 ஆம் ஆண்டு மற்றும் 1658 ஆம் ஆண்டுகளில் இலங்கையைத் தம்வசப்படுத்திய போர்த்துக்கேயர்,ஒல்லாந்தர் ஆகியோர் தமது தேசநிர்வாக நடைமுறைகளை இங்குள்ள தேசவழமைகளுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தைச் செலுத்தினர்.
அவர்களைத் தொடர்ந்து 1796 இல் பிரித்தானியர்கள் இலங்கையைக் கைப்பற்றினர். இவர்கள் பல்வேறு தலைமைகளின் கீழிருந்த பிரதேசங்களைக் கைப்பற்றி ஒரே ஆளுகையின் கீழ் கொண்டுவந்தனர். பிரித்தானியர் முறையான ஆட்சியமைப்பை ஏற்கனவே இருந்த ஆட்சியமைப்பிலும் நிர்வாக நடைமுறைகளிலும் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தனர். வரி அறவிடுதல், மாகாண நிர்வாகம், விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, காணி விவகாரம் , வனபரிபாலனம், பொருட்களைப் பாதுகாத்தல், புள்ளி விபரம் திரட்டுதல்,தேர்தல் கடமை, பிறப்பு - இறப்பு மற்றும் விவாகப் பதிவுகள் எனப் பல பணிகளை அதிகாரிகள் மூலம் மக்களுக்கு வழங்கினர். இவர்கள் 1948ஆம் ஆண்டில் இலங்கைக்குச் சுதந்திரம் வழங்கிச் சென்றபின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுவந்த ஆட்சியாளர்கள், சிறந்த நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்தி மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கும் வகையில் செயற்பட்டு வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக இலங்கையின் நிர்வாக சேவையை மக்களின் காலடிக்கு எடுத்துச் செல்வதைப் பிரதான இலக்காகக் கொண்டு 1989இல் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மாண்புமிகு ரணசிங்க பிரேமதாச அவர்கள், பிரதேச மட்டத்தில் நிர்வாகம் பன்முகப்படுத்தப்படுதல் வேண்டும் என்ற அடிப்படையில் ஏற்படுத்திய நிர்வாகக் கட்டமைப்பே பிரதேச செயலக முறைமையாகும். இந்நிலையில் நீர்வளமும் நிலவளமும் ஒருங்கே அமைந்த வலிகாமம் மேற்குப் பிரதேச மக்களின் நலன்களையும் பிரதேச அபிவிருத்தியினையும் அமைக்கும் வகையில் பிரதேச இறைவரி அலுவலகம் ( Divisional Revenue Office – DRO ) கிட்டத்தட்ட 1939 ஆம் ஆண்டளவில் இயங்கும் நிலையில் காணப்பட்டது. இந்த அலுவலகத்தின் நிர்வாகத்தைச் சீர்தூக்கும் வகையில் DRO அல்லது “மணியகாரன்” என்றழைக்கப்பட்ட Divisional Revenue officer நியமிக்கப்பட்டார். பாராளுமன்றத்தின் அமைச்சரவைத் தீர்மானத்தின்படி மையப்படுத்தப்பட்டிருந்த நிர்வாகம் பன்முகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இவ் அலுவலகம் மக்கள் சேவையில் பின்வரும் செயற்பாடுகளைச் செயலாற்றியது.
- இறைவரி வசூலித்தல்.
- சமூகச் செயற்பாடுகளில் மக்களிடையே அமைதியினை ஏற்படுத்தல்.
- நிதிப்பரிபாலனம்.
- உணவு விநியோகம் (கூப்பன் நடைமுறை)
- அரச காணிகள் தொடர்பானவை.
மணியகாரன் ,கந்தோர் மணியங்காரன் என்ற பதங்கள் மருவிப் பிரிவுக்காரியாதிகாரி என்றழைக்கப்படும் முறை 145 அளவில் உருவானது. இந்நிலையில் கிராமங்கள் தோறும் விதானை என்றழைக்கப்படும் அதிகாரிகள் மக்களின் தேவைகளை இனங்கண்டு சேவையாற்றும் பொருட்டுச் செயற்பட்டனர். இந்த அதிகாரிகளுக்கு நேரடி மேலதிகாரியாக “உடையார்” என்றழைக்கப்படும் அதிகாரி ஒருவர் கடமையாறறினார். காலப்போக்கில் இம்முறையும் மாற்றப்பட்டது.
1956 இல் இலங்கை முழுவதும் 138 பெரும்பாக இறைவரி உத்தியோகத்தர் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. சமகாலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 10 இறைவரி காரியாதிகாரி பிரிவுகள் இருந்தன. இவற்றுள் வலிகாமம் மேற்கும் ஒன்றாகும். இந்நிர்வாகக் கட்டமைப்பை நிர்வகிக்கும் அதிகாரியாக உதவி அரசாங்க அதிபர் நியமிக்கப்பட்டார். இங்கு பின்வரும் அலுவலர்கள் கடமையாற்றினார்.
- ஆளணி உதவியாளர் ( பொது எழுதுநர் )
- பிரதம எழுதுநர்
- உணவுக் கட்டுப்பாட்டுத் திணைக்கள அலுவலர்
- அபிவிருத்தி உத்தியோகத்தர்
- கிராம அலுவலர்கள்
இந்த அலுவலர்கள் மூலமாகப் பின்வரும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
- வீட்டு மதிப்பீட்டுப் படிவம் ( House Holders’ List ) (குடும்பம் சார்ந்து முழு விபரமும் மக்களின் சகல நடவடிக்கைக்கும் இதன் பிரதி வழங்கப்படும்)
- தேர்தல் தொடர்பான வேலை.
- கூப்பன் நடைமுறை (வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு இந்த உணவு விநியோகம் நடைபெற்றது)
- கிராமிய அபிவிருத்தி
- விவசாய விரிவாக்கற் செய்பாடுகள்
- பொதுசன மாதாந்த உதவிப்பணம்
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்ணைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பம், வயது முதிர்ந்த மற்றும் நோய்வாய்ப்புள்ள மக்களுக்கு இப்பொதுசன மாதாந்த உதவிப் பணம் வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் வலிகாமம் தென்மேற்கு , வலிகாமம் மேற்கு ஆகிய இரு பிரிவுகளும் சங்கானையிலேயே வலிகாமம் மேற்கு என்ற ஒரே பிரிவாக இயங்கின. இங்கு சனத்தொகை அதிகமாகவும் தேவைகள் கூடுதலாகவும் இருந்தமையால் இவ்விர பிரிவுகளும் 1973 இல் தனித்தனி நிர்வாக அலகுகளாகப் பிரிக்கப்பட்டன. வலிகாமம் மேற்குப் பிரதேசத்தின் பரப்பளவு 47.5 சதுரக் கிலோமீற்றர் ஆகும். இக்காலப்பகுதியில் 10 கிராம அலுவலர் பிரிவுகள் செயற்பட்டு மக்களுக்கான பின்வரும் சேவைகளை வழங்கின.
- பொதுசன மாதாந்த உதவிப்பணம் வழங்கல்.
- அபிவிருத்தி நடவடிக்கைகள்.
- தேசிய அடையாள அட்டை அனுமதிப் பத்திரம்.
- காணி அனுமதிப் பத்திரம்.
- துப்பாக்கி அனுமதிப்பத்திரம்.
- உணவு முத்திரை விநியோகம்.
அக்காலப்பகுதியில் கடமையாற்றிய அலுவலர்கள் விபரம் பின்வருமாறு:
- உதவி அரசாங்க அதிபர்
- ஆளனி உத்தியோகத்தர்
- பிரதம எழுதுநர்
- எழுதுநர்கள் - 10
- அபிவிருத்தி உத்தியோகத்தர்
- கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்
- உதவிக் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்
- விளையாட்டு உத்தியோகத்தர்
- சமூக சேவை உத்தியோகத்தர்
- கிராம உத்தியோகத்தர் - 10
- சிற்றூழியர் - 3
இந்த அலுவலர்கள் கிராமங்கள் தோறும் சென்று பொதுமக்களின் தேவைகளை இனங்கண்டு நிறைவான சேவைகளை வழங்கினர். வருடாவருடம் நடமாடும் சேவைகள் நடத்தப்பட்டன. தேசிய அடையாள அட்டை , மாதாந்த உதவிப் பணம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பணிகள் மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டன.
கிராமங்களில் கிராமஅபிவிருத்திச் சங்கங்கள், சனசமூக நிலையங்கள், இளைஞர் கழகம், விளையாட்டுக் கழகம் முதலான கிராம மட்ட அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு அந்த அமைப்புக்களுக்கூடாகப் பலஅபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கிராம மக்களிடையே தலைமைத்துவப் பண்புகளை வளர்க்கும் நோக்குடன் 1995இல் மேற்படி அமைப்புக்களின் நிர்வாக உறுப்பினர்களுக்குத் தலைமைத்துவப் பயிற்சிகள் அளிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த உதவி அரசாங்க அதிபர் பணிமனை ஆரம்ப காலகட்டத்தில் சங்கானைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்திற்கு அண்மையிலுள்ள Dr.சதாசிவம் என்பவரது வீட்டிலும் 1984 இல் கலாசார மண்டபத்திலும் 1987 இல் சட்டத்தரணி சுப்பிரமணியம் வீட்டிலும் இயங்கியது. இக்காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாகப் பணிமனைக்குரிய ஆவணங்களும் எரிக்கப்பட்டன. பின்னர் 1994 இல் சங்கானை மக்கள் வங்கி இயங்கி வந்த ஆலடி கோவிலுக்கு அண்மையான கட்டத்திலும் 1994 இல் சங்கானைப் பலநோக்குக் கூட்டுறவுக்குச் சொந்தமான பவலூம் கட்டடத்திலும் இயங்கியது. இக்காலப்பகுதியிலேயே உதவி அசாங்க அதிபர் பணிமனை பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்பட்டு நிர்வாகசேவை 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுப் பன்முகப்படுத்தப்பட்ட நிர்வாகச் செயற்பாடுகள் நடைபெற்றன. 1995 ஒக்டோபரில் நடைபெற்ற இடப்பெயர்வின் போது மிருசுவில் பிரதேசத்தில் பிரதேசசபைக் கட்டடத்தில் இயங்கியது. மீண்டும் 1996 ஏப்ரல் மாதம் தொடங்கி அதே சங்கானை பவலூம் கட்டடத்தில் இயங்கியது.
இந்நிலையில் நிர்வாகச் செயற்பாடுகளின் விரிவாக்கத்தினால் தனக்கெனச் சொந்தக் காணியும் கட்டடமும் ஏற்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டது. சங்கானைச் சமூக அபிவிருத்தி அமைப்பினால் பொதுமக்களிடம் அன்பளிப்பாகப் பணம் பெறப்பட்டுக் காணி கொள்வனவு செய்யப்பட்டது. இந்த வகையில் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் கட்டடத்திற்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1998.08.24 இல் அப்போதைய யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மதிப்பிற்குரிய து.வைத்திலிங்கம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி கட்டட வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு அப்போதைய வலி மேற்கு – சுழிபுரம் பிரதேச சபைத் தவிசாளர் கௌரவ.என்.திரிலோகநாதன் அவர்களால் திறந்துவைககப்பட்டது. தற்போது பிரதேச செயலகம் தனது சொந்தக் கட்டடத்தில் சேவையினைத் தொடர்கிறது.
ஆரம்பத்தில் இந்த உதவி அரசாங்க அதிபர் பிரிவில் 10 கிராம அலுவலர் பிரிவுகள் செயற்பட்டன.
- சங்கானை கிழக்கு
- சங்கானை மேற்கு
- வட்டு கிழக்கு
- வட்டு மேற்கு
- சுழிபுரம் கிழக்கு
- சுழிபுரம் மேற்கு
- அராலி மேற்கு
- அராலி கிழக்கு
- மூளாய்
- பொன்னாலை
1979இல் மேலும் 5 கிராம அலுவலர் பிரிவுகள் பிரிக்கப்பட்டன.
- சங்கரத்தை
- அராலி வடக்கு
- வட்டு தெற்கு
- தொல்புரம்
- சங்கானை தெற்கு
1989 இல் மேலும் கிராம அலுவலர் பிரிவுகள் விஸ்தரிக்கப்பட்டு 25 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன.
- வட்டு கிழக்கு
- வட்டு வடக்கு
- சங்கரத்தை
- அராலி மேற்கு
- அராலி மத்தி
- அராலி தெற்கு
- அராலி கிழக்கு
- அராலி வடக்கு
- வட்டு தெற்கு
- வட்டு தென்மேற்கு
- வட்டு மேற்கு
- தொல்புரம் கிழக்கு
- தொல்புரம் மேற்கு
- பொன்னாலை
- மூளாய்
- சுழிபுரம் மேற்கு
- சுழிபுரம் மத்தி
- சுழிபுரம் கிழக்கு
- பண்ணாகம்
- சித்தன்கேணி
- சங்கானை கிழக்கு
- சங்கானை மேற்கு
- சங்கானை தெற்கு
- சங்கானை மத்தி
- பனிப்புலம்
மாகாணசபை நிர்வாகத்தின் கீழும் 1992 இல் பன்முகப்படுத்தப்பட்டுப் பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்பட்ட போது சேவைகள் மேலும் ஒழுங்குபடுத்தப்பட்டு விரிவுபடுத்தப்பட்டன. மக்களின் கோரிக்கைகளை ஏற்று அபிவிருத்திச் செயற்றிட்டங்களை மக்கள் மத்தியில் செயற்படுத்தும் நோக்குடன் பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்டன. மக்களின் அபிலாஷைகளுக்கும் அடையாளம் காணப்பட்ட தேசிய முன்னுரிமைகளுக்கும் ஏற்றதான வினைத்திறனும் பயனுறுதியும் கொண்ட பொதுச்சேவையையும் உறுதியான நிர்வாக நடைமுறைகளையும் பிரதேச கிராமிய மட்டங்களில் உத்தரவாதப்படுத்தலை நோக்காகவும் அதியுன்னத மக்கள் சேவையைத் தூரநோக்காகக் கொண்டு இப்பிரதேச செயலகம் செயலாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
வலிகாமம் மேற்குப் பிரதேசசெயலகத்தில் பல கிளைகளினூடாகப் பொதுமக்கள் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- நிர்வாகக்கிளை
- நிதிக்கிளை
- திட்டமிடற்கிளை
- சமுர்த்திப்பிரிவு
- பதிவகக்கிளை
- சமூகப் பாதுகாப்பு, சிறுவர் பிரிவு
- கிராம அபிவிருத்திப் பிரிவு
- கலாசாரப் பிரிவு
- காணிப் பகுதி
- விஞ்ஞான தொழில்நுட்பப் பகுதி (விதாதா வளநிலையம்)
- ஆட்பதிவுத் திணைக்களப் பிரிவு
- ஓய்வூதியக்கிளை
- மோட்டார் போக்குவரத்துப் பிரிவு
போன்ற கிளைகள் குறிப்பிடத்தக்கன. இவற்றினூடாக கிராம சேவையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என்போரின் பங்களிப்புடன் எமது பிரதேச செயலகம் சிறந்த பொதுமக்கள் சேவையினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
| சங்கானைப் பிரதேச செயலக பிரிவு வரைபடம் |
எமது வலிகாமம் மேற்குப் பிரதேச செயலகத்தில் ஆரம்பகாலம் முதல் இன்று வரை காலத்திற்குக் காலம் பல உதவி அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் கடமையாற்றியுள்ளனர். அவர்களின் விபரம் வருமாறு:
| Name | From | To | |
| திரு.நடராசா |
உதவி அரசாங்க அதிபர் |
1975 | 1978 |
| திரு.கே.அருணாசலம் | உதவி அரசாங்க அதிபர் | 1975 | 1978 |
| திரு.எம்.சுப்பிரமணியம் | உதவி அரசாங்க அதிபர் | 1978 | 1979 |
| திரு.எஸ்.செந்தில்வடிவேல் | உதவி அரசாங்க அதிபர் | 1980 | 1984 |
| திரு.ரி.வைத்திலிங்கம் | உதவி அரசாங்க அதிபர் / பிரதேச செயலாளர் | 1984 | 1992 |
| செல்வி.ரூபினி கனகரத்தினம் | பிரதேச செயலாளர் | 1992 | 1993 |
| திரு.எல்.இளங்கோவன் | பிரதேச செயலாளர் | 1993 | 1993 |
| திரு.கே.சந்திரராஜா | பிரதேச செயலாளர் | 1994 | 2000 |
| திருமதி.பி.திலகநாயகம் போல் | பிரதேச செயலாளர் | 2000 | 2000 |
| திரு.னுச.கே.குணராசா | பிரதேச செயலாளர் | 2001 | 2001 |
| திரு.சி.ஏ.இரத்தினம் | பிரதேச செயலாளர் |
2002 |
2003 |
| திரு.சி.ஏ.மோகன்ராஜ் | பிரதேச செயலாளர் |
2003 |
2006 |
| திருமதி.தேவநவநந்தினி பாபு | பிரதேச செயலாளர் | 2006 | 2011 |
| திரு.அ.சோதிநாதன் | பிரதேச செயலாளர் | 2011 | 2017 |
| திருமதி.பொ.பிரேமினி | பிரதேச செயலாளர் | 2017 | தற்போது |














