வலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழா 2019
2019 ஆம் வருடத்திற்கான வலிகாமம் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதிவுசெய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையிலான விளையாட்டு விழாவானது 30.03.2019 ஆந்திகதி சனிக்கிழமை ஆகிய இன்று பி.ப 2.00 மணியளவில் யா/சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.
இவ்விழாவுக்கு மதிப்பிற்குரிய வலிமேற்கு பிரதேச செயலாளர் திருமதி.பொ.பிரேமினி அவர்கள் தலைமை தாங்கியதுடன் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுனர் அவர்களின் செயலாளரும் முன்னாள் வலிமேற்கு பிரதேச செயலாளருமான திரு.இ.இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். அத்துடன் சிறப்பு விருந்தினர்களாக யா/விக்ரோறியாக் கல்லூரி அதிபர் திருமதி.சத்தியகுமாரி சிவகுமார் அவர்களும் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.க.விஜிதரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.. அத்துடன் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை கட்டிட நிர்மாணப் பொறியியல் விற்பன்னரும் விளையாட்டு ஆர்வலருமாகிய திரு.சின்னத்தம்பி இராஜேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்.
இவ்விளையாட்டுவிழாவில் கழகங்களுக்கிடையிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து வெற்றியீட்டிய விளையாட்டு வீரவீராங்கனைகளுக்கான வெற்றிச்சின்னங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அத்துடன் வெற்றி பெற்றவர்களுக்காக கேடயங்களும் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் மற்றும் விருந்தினர்களால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் வரவேற்புரை உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.கி.செந்தூரன் அவர்களால் வழங்கப்பட்டது. அத்துடன் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் தனது தலைமையுரையில்,
பிரதேச மட்ட கழகங்கள் தமது ஒழுக்கங்களைச் சிறந்த முறையில் பேணி சமுகப் பொறுப்புள்ளவர்களாக செயற்படுதல் வேண்டுமெனவும் ஏனைய கல்விச் செயற்பாடுகளிலும் அக்கறை செலுத்த வேண்டுமெனவும் மாவட்ட , மாகாண , தேசிய போட்டிகளில் வெற்றிகளைப் பெற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அத்துடன் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் திரு.கஜிதரன் அவர்கள் குறிப்பிடுகையில் அதிக வெப்பம் இருக்கும் இக்காலத்தில் கூட இவ்வீரவீராங்கனைகள் விளையாட்டில் ஆர்வமாக செயற்பட்டதாகவும் இவ்விளையாட்டு விழாவானது உரிய காலத்தில் சிறப்பாக நடாத்தி முடித்திருப்பதையிட்டு நன்றி பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார். அத்துடன் மாவட்ட , மாகாண , தேசிய , சர்வதேச மட்டப் போட்டிகளில் சாதனை படைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன் நேர்சிந்தனையுடன் கல்வித்துறையிலே அக்கறை காட்டும் அதேவேளை விளையாட்டுத்துறையிலும் அதிக அக்கறை காட்டப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், இவ்விளையாட்டு விழாவில் பங்களித்த யாவருக்கும் எமது பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் திரு.செ.ரம்மியராகுலன் அவர்களின் நன்றி பாராட்டுதலுடன் இனிது நிறைவுற்றது.














