நிலைபேறான வன முகாமைத்துவத்தின் ஊடாக வளி மாசடைவதைக் குறைத்துக்கொள்ளல்.
உலக சுற்றாடல் தின நிகழ்வுகள் வலிகாமம் மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 06.06.2019 அன்று வலிகாமம் மேற்கு பிரதேச செயலக மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி.பொ.பிரேமினி அவர்களின் தலைமையில் உலக தரிசன நிறுவனத்தின் அனுசரனையுடன் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் அவர்கள் தமது தலைமை யுரையில் குறிப்பிடுகையில்,
1973 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 5 ஆந் திகதி உலக சுற்றாடல் தினம் ஐக்கிய நாடுகள்சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுக் கொண்டாடப்பட்டுவருகின்றது.
அந்தவகையில் இந்த வருடத் தொனிப்பொருளாக “நிலைபேறான வன முகாமைத்துவத்தின் ஊடாக வளி மாசடைவதைக் குறைத்துக்கொள்ளல்” என்பதாகும்.
பஞ்சபூதங்களான இயற்கையுடன் ஒன்றிணைந்து அவற்றுக்கு கெடுதல் செய்யாமல் எமது வாழ்க்கையை அமைப்பதே சிறப்பானது. சங்கானைப் பிரதேச செயலகம் கூடியளவு கடற்கரையைக் கொண்ட பிரதேசம். இப்பிரதேசத்தில் கடற்கரை மணல் அகழ்வதும் , கடற்கரையில் உள்ள மரங்கள் வெட்டப்படுவதும் இச்சூழல் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகின்றது. அண்மையில் சுழிபுரம் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு மரங்கள் பல அழிவடைந்தது.
தற்போது கைத்தொழில் மயமாக்கல் காரணமாக சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால் இயற்கை அனர்த்தங்களும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. கூடிய அளவில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதும் இதற்கான காரணமுமாகும். இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதேச செயலகத்தினால் வரையறுக்கப்பட்ட அளவில் அனுமதிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் புதிய மரங்கள் நாட்டப்பட்டு தொடர்ந்து பாராமரிக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய உலக தரிசன நிறுவன முகாமையாளருக்கு நன்றிகளை தெரிவித்தார்.
அத்துடன் இந்நிகழ்வில் உலக தரிசன நிறுவன முகாமையாளர்; தெரிவிக்கையில்,
1973 ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட இவ் உலக சுற்றாடல் தின நிகழ்வு 46 ஆண்டுகள் கடந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருளில் கொண்டாடிவருகின்றோம். அத்துடன் உலக புள்ளிவிபரங்களின் பிரகாரம் அதிக மக்கள் தூய வளியைச் சுவாசிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். அத்துடன் இச்சுற்றாடல் மாசடைவின் காரணமான அதிகளவான மரணங்கள் நிகழ்கின்றன.
வளங்களை சரியான முறையில் பயன்படுத்தாமை எதிகால சந்ததியினருக்கு நாம் செய்யும் துரோகமாக அமையும்.
சொப்பிங் பாக் ஐ நிலத்தில் போடுவதால் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுகின்றது.
முன்னோர்கள் அக்காலத்தில் எப்போது மழைவரும் , காற்றடிக்கும் போன்ற சரியாக இயற்கை எதிர்வுகூறல்களை கூறினார்கள் . இக்காலத்தில் எம்மால் இப்படிக் கூறவியலாது. நாம் செய்யும் தவறுகள் காரணமாக எதையுமே திட்டமிட்டுக் கூறமுடியாதுள்ளது. தற்போது இயற்கை எமக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது. நாங்கள் ஒவ்வொருவருமே இதற்கு காரணமாக இருக்கின்றோம்.
கடந்த காலத் தரவுகளை நோக்கினால் மழை வெள்ளத்தை விட வரட்சி என்பது பாரிய தாக்கமாக உள்ளது.
எனவே இச்சமுதாயத்திற்கு சுற்றாடலைப் பாதுகாப்பது தொடர்பாக பகிர்ந்து கொள்வதற்கு நீங்கள் ஊடகமாக இருக்க வேண்டுமெனவும், இயற்கையைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வை எதிர்கால சந்ததியினருக்கு தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
அத்துடன் சுழிபுரம் மேற்கு கலைமகள் இலவசக் கல்வி மாணவர்களால் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வைத் தூண்டும் விதத்திலான தெருவெளிநாடகமும் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து சுற்றாடல் விழிப்புணர்வு தொடர்பாக கிராமமட்ட உத்தியோகத்தர்களுக்காக நடாத்தப்பட்ட போட்டியில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இயற்கை உற்பத்தியை பிரதிபலிக்கும் கேடயங்களும் கூடைகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
| |
| |
| |
| |
| |














