வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகமும் கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்திய 2025 ஆம் ஆண்டுக்கான பண்பாட்டு பெருவிழா கடந்த வெள்ளிக்கிழமை 22/08/2025 பிற்பகல் 2.00 மணிக்கு அராலி இந்துக்கல்லூரியில் மிக சிறப்பாக இடம் பெற்றது.
திருமதி கவிதா உதயகுமார், பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்ற மேற்படி கலாச்சார விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினராக வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் ச.ஜயந்தனும் கௌரவ விருந்தினராக திருமதி வி.சுகுணாளினி சிரேஷ்ட கலாசார உத்தி உத்தியோகத்தர் மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம் ந.சிவானந்தன் அதிபர் அராலி இந்துக்கல்லூரி மற்றம் தி.விஜயசிறி சிற்பக் கலைஞர் அராலி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அராலி முருகமூர்த்தி ஆலயத்திலிருந்து ஆரம்பமான இந்தப் பண்பாட்டு பெருவிழா பவனியில் கலை கலாச்சாரங்களை தாங்கிய பல அம்சங்கள் இடம்பெற்றன.
மங்கள இசை முழங்க பேரிகை தபேலா தம்பட்டம் கிராமிய நடனங்கள், கிராமிய பாடல்கள், மாட்டு வண்டிகளின் ஊர்வலம், சிறுவர்களின் நாட்டிய நாடகங்கள், வினோத உடை உட்பட பல அம்சங்கள் இந்த ஊர்வலத்தில் கலந்து சிறப்பித்தன.
இந்தப் பண்பாட்டு பெருவிழாவில் மறைந்த அமரர் மாணிக்கம் ஏரம்பு , நாடக கலைஞர் அவர்கள் நினைவு கூரப்பட்டு அவரின் குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர்.
அத்துடன் மூத்த கலைஞர்கள் மற்றும் இளங்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பெருந்திரளான மக்கள் பங்கேற்ற விழாவாக அமைந்திருந்தமை சிறப்பிற்குரிய விடயமாகும். அத்துடன் இவ்விழாவானது கிராம மட்ட அமைப்புக்களின், பொது மக்களின் நலன் விரும்பிகளின் அனுசரனையுடனும் பங்களிப்புடனும் நடைபெற்றமை பெருமைக்குரிய விடயமாகும்.
மிகவும் சிறப்பாக இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான பண்பாட்டுப் பெருவிழாவில் கலைஞர்கள், ஊர்மக்கள், நலன் விரும்பிகள், பொது அமைப்புகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பண்பாட்டு விழாவை சிறப்பித்தனர்.















